கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை

உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையின் கல்வி
முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது புதிய அரசாங்கத்தின் பிரதான
குறிக்கோளாகக் காணப்படுகின்றது. இந்த அறிவிப்பானது, தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் அறிக்கையில், தொழிற்கல்வியுடன் தொடர்புபடுத்தப்பட்டு முதலில்
இடம்பெற்றது. பின்னர், அக்டோபர் 2024 இல், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,
எமது கல்விமுறை உலகளாவிய கோரிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் கட்டமைக்கப்பட
வேண்டும் என்று கூறினார். பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய
2024 டிசெம்பரில் ஆற்றிய ஓர் உரையில், தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில்
காணப்படும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை வாய்ந்த பணியாளர்களை
உருவாக்குவதே அபிவிருத்திக்கான தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தின்
பிரதான குறிக்கோள் என தெரிவித்தார். 

மாணவர்களும் பட்டதாரிகளும் தொழில்களைப் பெற்றுக்கொள்வதிலும் தேசிய மற்றும்
உலகளாவிய பொருளாதாரத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வதிலும் எமது
கல்வி முறைமை அவர்களுக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பது தொடர்பாக
சிந்திப்பது எவ்வளவு அவசியமோ அதேயளவு ‘உலகளாவிய’, ‘உலகளாவிய
தொழிற்சந்தை’ ஆகிய பதங்களை பற்றி ஆராய்வதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஆகிய இரண்டிலும் அவை உருவாக்கும் சமத்துவமின்மை மற்றும்
புறக்கணிப்புக்களைப் பற்றி விவாதிப்பதும் அவசியமாகும். 

உலகின் இரு கண்ணோட்டங்கள்

சமகால அரசியல் போக்குகளில் ‘உலகளாவிய’ என்ற எண்ணக்கருவானது இருவேறு
வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று தேசிய எல்லைகளைக் கடந்து
மூலதனத்தைக் கொண்டுசேர்க்கின்ற எல்லையற்ற உலகினை உருவாக்குவதைச்
சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய உலகமானது செல்வச் செழிப்பை ஈட்டுவதில்
நன்மையளித்தாலும், பன்னாட்டு மூலதனத்தின் தடையற்ற போக்கினால் உருவான
நிச்சயமற்றதன்மை காரணமாக, உலகின் வறிய நாடுகளில் பல்வேறு சிக்கல்களை
ஏற்படுத்தியுள்ளது.

1984 ஆம் ஆண்டு இந்தியாவில் போபால் என்ற இடத்தில் ஏற்பட்ட பாரிய
வாயுக்கசிவு மற்றும் 2012 ஆம் ஆண்டு பங்களாதேஷிலுள்ள ஆடைத்
தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் என்பவற்றை இதற்கு சிறந்த
உதாரணங்களாகக் குறிப்பிடலாம். உலகிலுள்ள பெரும்பாலான பிரச்சினைகளும்
சிக்கல்களும் உலகத் தொழிற்சந்தையின் இயங்குதன்மையாலேயே ஏற்படுகின்றன.
இத்தொழிற்சந்தையானது உலகளாவிய ரீதியில் இனம், பால் மற்றும் தேசியம்
என்பவற்றின் அடிப்படையில் தொழிலாளர்களிடையே பாரிய பிரிவினைகளை
உருவாக்குகிறது. இம்முறைமை உயர் குடியினர் பெருந்தொகையான இலாபத்தை
ஈட்டுவதற்கு உதவும் அதேநேரத்தில், வறிய நாடுகளிலுள்ள உழைக்கும்
வர்க்கத்தினருக்கு, குறிப்பாக, பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பாரிய
பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகிறது. 

இதற்கு நேர்மாறாக, சமூகநீதி மற்றும் சர்வதேசவாதத்தில் ஆர்வம் கொண்டவர்கள்,
உலகளாவிய என்பதை ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம், சமத்துவம் பற்றிய தீவிர
சிந்தனையை உருவாக்க விளையும் இலட்சியமாகவே கருதுகின்றனர். இந்த உலகானது தேசிய மற்றும் உலகளவில் காணப்படும் ஒடுக்குமுறையின் சகல
வடிவங்களையும் தகர்த்தெறியும் ஒரு ஒருமித்த விருப்பினால்
ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. 

கல்வி பற்றிய எமது கலந்துரையாடல்கள் ‘உலகளாவிய’ என்பது தொடர்பான
இருவேறுபட்ட கண்ணோட்டத்தினால் தூண்டப்படுவதாகத் தென்படுகிறது. ஒருபுறம்
அரசாங்கங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள், உதவிக் குழுக்கள் மற்றும் கல்விப்
புலத்தின் ஒருபகுதியினர் பன்னாட்டுக்கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு
உலகமயமாக்கப்பட்ட ஊழியர்படையை தனியார் துறைக்காக உருவாக்க
வேண்டுமென்ற தொடர் அழுத்தத்தை எமது பல்கலைக்கழகங்களுக்குக்
கொடுக்கின்றனர். மறுபுறம், எமது சமூகங்களிலும் நாடுகளிலும் நாம் காணும்
வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று
அழைப்புவிடுக்கின்றன. இது மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடிமக்களிடையே
ஒற்றுமை, எதிர்ப்பின் கற்பனைகளைத் தூண்டும் விமர்சன சிந்தனையையும்
படைப்புத்திறன்களையும் வளர்ப்பதை யும் உள்ளடக்கியதாகும். நவதாராளவாதத்தால்
தூண்டப்பட்ட இந்த சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இலங்கையிலும் உலகின்
பல நாடுகளிலும் பெருகி வருவதால், கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த எமது
விவாதங்களில் இந்த இரண்டாவது கண்ணோட்டத்தை முன்னிலைப்படுத்துவது
காலத்தின் தேவையாகும். 

உலகத்தொழிற்சந்தை VS உலகளாவிய நெருக்கடிகள்

உலகளாவிய தொழிற்சந்தை என்பது உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒரு
அடிபணிந்த ஊழியப்படையை உருவாக்கி வழங்கக் கட்டாயப்படுத்தும் ஒரு
நவதாராளவாதக் கருத்தாகும். இவ் ஊழியப்படையானது உலக முதலாளித்துவத்தின்
சுரண்டல், நலதாரளத்துவக் குறிக்கோள்களை முன்கொண்டு செல்வதை நோக்காகக்
கொண்டது. இவ் ஊழியர் சந்தையின் சட்டதிட்டங்கள், உலகமானது
சமத்துவமற்றதாகக் காணப்படுவதனூடாக, வீடு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும்
மின்சாரம் ஆகிய அடிப்படைத் தேவைகள் மிகவும் கணிசமான அளவு மக்களுக்கு
மாத்திரமே கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
என்வே, இவ் ஊழியர் சந்தையின் சிந்தனைகள் மற்றும் தர்க்கங்களை
அடிப்படையாகக்கொண்ட எந்தவொரு கல்விக் கொள்கைகள் தொடர்பாகவும் நாம்
மிகவும் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். 

உலகத் தொழிற்சந்தையின் எதிர்பார்ப்புக்கும் தற்போதைய உலகின் கசப்பான
அனுபவங்களுக்கும் இடையில் நீண்டதொரு இடைவெளி காணப்படுகின்றது. இவ்
இடைவெளியானது கல்வித்துறையிலிருக்கும் அனைவராலும்
கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். காசாவில் நடைபெறும் இனப்படுகொலை,
உலகின் பல பாகங்களில் வலதுசாரி ஜனரஞ்சக வாதத்தின் எழுச்சி, பல நாடுகளுக்குள்
அதிகரித்து வரும் வருமான ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் அழிப்பு, பெண்கள் மற்றும்
பாலியல் சிறுபான்மையினர் உலகெங்கிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன
இன்று நாம் கண்கூடாகக் காணும் அவலங்களாகும்.

எவ்வாறாயினும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய
நிறுவனங்களால் எமது கல்வி முறைகள் மீது திணிக்கப்படும் சீர்திருத்தங்கள் நவதாராளவாத அணுகுமுறையுடன் இயைபடைபவையாகவே காணப்படுகின்றன.
இச் சீர்திருத்தங்கள் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கானோரைப் பாதிக்கும்
பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடிகளுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஆகியவற்றை இணைக்க தவறியதுடன், இந்த நெருக்கடிகளின் வரலாற்றுப்
பின்புலங்கள் அல்லது உலகின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு எமது கல்வி
முறைமைகள் எவ்வாறு பங்களித்தன என்பன குறித்த புரிதலை மாணவர்கள் மத்தியில்
ஏற்படுத்துவதிலும் கரிசனை கொள்ளவில்லை. 

நவதாராளவாத கல்விச் சீர்திருத்தங்கள்

நவதாராளவாத நன்கொடையாளர்கள் முதன்மையாக நமது கல்வி நிறுவனங்கள்
உலகளாவிய தொழிலாளர் சந்தையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம்
செலுத்துகின்றனர். அவர்கள் அரசாங்கங்களை, கல்வியைத் தனியார்மயமாக்கவும்,
பல்கலைக்கழகங்களைக் கட்டணம் அறவிடும் கல்வித் திட்டங்களை
அறிமுகப்படுத்தவும் தூண்டுகின்றனர். கல்வியை சந்தைப்படுத்தக்கூடிய
பொருளாகவும், கல்வி முறைகளை இலாபம் ஈட்டும் தளங்களாகவும் மாற்றுவதே
அவர்களின் குறிக்கோளாகக் காணப்படுகின்றது. மாற்றத்திற்கான உள்ளூர் மற்றும்
உலகளாவிய ஒற்றுமையை உருவாக்கும் கல்விக்காகப் பாடுபடுவதற்குப் பதிலாக,
இந்த நன்கொடையாளர்கள், சுரண்டும் மூலதனத்தின் முன்னோக்கிய பயணத்தை
ஆதரிக்கும் வகையில் நாடுகளையும் கூட்டங்களையும் இணைக்கக்கூடிய
தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். 2000 களுக்குப்
பிறகு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கற்றலுக்கு முக்கிய இடத்தை வழங்கியுள்ள இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இந்த இரண்டு துறைகளும் உலகளாவிய மூலதன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ்
இருக்கின்ற தொழிற்சந்தையில் பட்டதாரிகள் நிலைத்திருக்க வேண்டிய அவசியமான
தகுதிகளாக விளம்பரப்படுத்தப்பட்டன. 

அதேபோல பாடத்திட்டங்களில் இருந்து விமர்சன திறனை வளர்க்கும்
உள்ளடக்கங்களை நீக்கி, அதற்குப் பதிலாக தலைமைத்துவம், நெறிமுறைகள் மற்றும்
நல்லொழுக்கம், தொடர்பாடற்திறன் மற்றும் பேச்சுத்திறன் போன்ற மென்மையான
திறன்கள் வேலைவாய்ப்பிற்கான அடிப்படைத் தகுதிகளாகச் சேர்க்கப்படுவது
போன்ற தற்போதைய நடவடிக்கைகள், நவதாராளவாத நோக்கங்களைக்
கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும், வர்த்தக உடையுடன், ஆங்கிலத்தில் பேசும்
உலகளாவிய தொழில் முனைவோரையும் அவர்களுக்கு உதவுவோரையும்
உருவாக்கவே மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பாடநெறிகள், காலனித்துவ
மதிப்புக்கள் மற்றும் சிந்தனை முறைகளை உலகமயமாக்கும் அதேவேளை,
திறன்களை விமர்சன சிந்தனையிலிருந்தும், தொழில்நுட்பத்தை அரசியலிருந்தும்,
மற்றும் வேலைவாய்ப்பை சமூக செயற்பாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்துகின்றன. 
பாடநெறிகளுக்கிடையில் ஓர் அதிகாரப்படிநிலையை உருவாக்கி, நவதாரளவாதச்
சீர்திருத்தங்கள் கடின அறிவியல் துறைகள், தொழில்நுட்பக்கல்வி, முகாமைத்துவம்,
கணக்கியல் மற்றும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன. இதன்
விளைவாக, பல நாடுகளில் மானுட மற்றும் சமூக அறிவியல் துறைகள்
பயனற்றவையாகப் பார்க்கப்பட்டு, நிதியுதவிகளின்றி புறக்கணிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் மற்றும் மொழிகள் சார்ந்த பாடநெறி களைப் பொதுப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில
சூழ்நிலைகளில், இந்த துறைகளில் கற்பிக்கும் கல்வியாளர்கள் தங்கள் வேலைகளை
இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். 

இலங்கையில், ஆங்கில மொழி கற்பித்தல் பட்டப்படிப்பு திட்டங்கள்
இலாபகரமானவையாகக் காட்டப்படுகின்ற அதேநேரத்தில் இலக்கியங்கள் மற்றும்
உள்ளூர் மொழிகள் ஆகிய துறைகள் கற்பவர்களுக்கு எந்தவிதமான பண ரீதியான
பலனையும் தராத துறைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பில்,
கலை, இலக்கியம் மற்றும் மானுடவியல்களுக்கு ஏதேனும் மதிப்பு இருந்தால்,
அவற்றின் பங்கு பணரீதியான பலம் படைத்தவர்களுக்கு பொழுதுபோக்கை
வழங்குவதாகக் குறைக்கப்படுகிறது. கவிதை ஒரே நேரத்தில் அறிவுறுத்துவதாகவும்
மகிழ்ச்சிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என ரோமானிய கவிஞர் ஹோரேஸ்
கூறியுள்ளார்.

நவதாராளவாத தொழிற்சந்தை இந்த இரட்டை இலக்கில் ஒரு பிளவினை ஏற்படுத்தி,
கலை மற்றும் இலக்கியத்தை மகிழ்ச்சியை தருவிக்கும் தொழில்களாக குறுகிய
சொற்களில் வடிவமைக்கின்றது. இது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்
படைப்பாற்றல் மற்றும் உணர்ச்சிகரமான உழைப்பு வகிக்கும் பங்கை இது அழிக்க
முயல்கிறது. இதனால்தான் அரசாங்கங்கள் நமது கல்வி முறையைப் புத்துயிர்பெறச்
செய்யும்போது உலகளாவிய தொழிலாளர் சந்தையினூடாகவும், தேவைப்படும்போது
அவற்றைக் கடந்து செல்லவும் கூடியதாகச் செயற்பட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கான முன்னோக்கிய பாதை

மாற்றத்தை உறுதியளித்து, தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP)
அரசாங்கம், உலகளாவிய தொழிலாளர் சந்தையின் நவதாராளமய நிபந்தனைகள்,
அதன் கல்வி சீர்திருத்தங்களை பாரியளவில் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. நாடு
நவதாராளவாத கொள்கைகளுக்குள் உட்பட்டமையே, 2022 ஆம் ஆண்டில் மக்கள்
எழுச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடி, மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
(NPP) தேர்தல் வெற்றி ஆகியவற்றிற்கான முக்கிய காரணம் ஆகும். தற்போதைய
நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தால்,
கல்வித்துறை உட்பட அனைத்து தரப்புகளிலும் புகுந்துள்ள நவதாராளவாதத்தை
நேரடியாக எதிர்த்துப் போராட வேண்டும். ஒருபுறம் சமூக நீதிக்கான
அர்ப்பணிப்பினையும், மறுபுறம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையின்
கட்டளைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஆதரிக்கும் கருத்துக்கள் போன்ற
குழப்பமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தல் மற்றும் தீர்மானம் எடுக்க முடியாத
நிலை, கல்வி முறையை மேலும் பலவீனப்படுத்தும். இந்த தெளிவின்மை ஒரு
காரணமாக, இலங்கை மற்றும் பல நாடுகளின் கல்வித்துறை நிதியுதவிக்காக
நம்பியுள்ள நன்கொடை நிறுவனங்கள் செலுத்தும் கடுமையான அழுத்தங்கள்
காணப்படுகின்றது.

புதிய அரசாங்கமானது தனது வரவு-செலவு திட்ட முன்னுரிமைகளை சரியாக
அடையாளங்கண்டு, அரச கல்விக்கான செலவீனங்களை அதிகரிப்பதோடு
உலகளாவிய மூலதனத்தின் மேலாதிக்கத்தை மாணவர்கள் எதிர்க்க உதவும் கல்வி
நோக்கங்களை உருவாக்கி ஆதரிக்க வேண்டும். மானுடவியல் மற்றும் சமூக
அறிவியல் துறைகளுக்கு அதிகளவு ஆதரவு வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு சமூக பொருளாதார சமத்துவமின்மைகளை குறைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும்
வழிவகைகளை ஆராயக்கூடிய, மற்றும் சூழலியல் ரீதியாக சாத்தியமான அபிவிருத்தி
முயற்சிகளை ஆதரிக்கின்ற வகையில், இயற்கை அறிவியல் துறைகளில்
பட்டப்படிப்புக்களை மீளுருவாக்கம் செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, மறுசீரமைப்பு செயல்முறையானது, சமத்துவமிக்க சமூக
மாற்றத்தை மையமாகக்கொண்ட புதிய விடுதலைவாத கண்ணோட்டத்துடன்
அணுகப்பட வேண்டும்.