பாராளுமன்றத்தில் நடைபெறும் கேலிக்கூத்து: கல்வி எதிர் தகைமைகள்

கௌஷல்யா பெரேரா

இலங்கையர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை மிகுந்த விருப்பத்துடன்
பாராட்டுகிறார்கள். இந்தத் தகுதிகள், தங்க நகைகள், விலையுயர்ந்த கடிகாரம்
அல்லது மதிப்புமிக்க‌ காலணிகள் போன்ற சொத்துக்களைப் போலவே,
மதிப்பீட்டிற்கான ஒப்பீடுகளுக்கு வாய்ப்பளிக்கின்றன. இது சான்றுகளின்
மூலம், மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை
எழுப்புகிறது—ஆனால் இது ஒரு உயர் விழுமிய‌ நிலைமையில் இருந்து
நிகழ்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக, (இப்போது) முன்னாள் சபாநாயகராக
ஆகியிருக்கும் ஒருவரின் மீது கல்வித் தகுதிகள் போலியாக
உருவாக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் ஊடகங்களிலும் சமூக
ஊடகங்களிலும் பரவியதை மக்களாகிய‌ நாம் கவனித்தோம். அவர்
இதற்கான எதிர்வாதத்தை வழங்குவார் என்று காத்திருந்தோம், இதற்கிடையே
அவரது கட்சி மற்றும் அவர் பணிபுரியும் நாடாளுமன்றம், இந்தக்
குற்றச்சாட்டுகளை சரிபார்க்கும் விருப்பமோ வாய்ப்போ இல்லாதது போலவே
இருந்தது. நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ‘தகுதிப்
போர்’ ஒரு அக்தியடையாத நகைச்சுவையான நாடகமாக மாறியிருக்கிறது.

இது இரு அடுக்குகளைக் கொண்ட பிரச்சனையாகும். ஒன்று, இலங்கையர்கள்
தங்கள் கல்வித் தகுதிகளுடன் கொண்டிருக்கும் நலமற்ற உறவு; மற்றொன்று,
தேசிய மக்கள் சக்தி (NPP) தங்களை ‘சுத்தமான கட்சி’ என்று
விளம்பரப்படுத்திய விதம்.

இரண்டாவது பகுதியை முதலில் எடுத்துக்கொள்வோம். தேசிய மக்கள்
சக்தியின் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த விடயம், “சூதுஸ்ஸன்ட சுதுசு
தென‌” — அதாவது, தகுதியுள்ள நபர்களுக்கு தகுந்த பதவிகளை அளிப்போம்
எனும் உறுதியாகும். இது அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பகுதியில் இருந்தது, மேலும் நாட்டின் அரசியலில் பரவலாக காணப்படும் உறவினர்
ஆதரவுக் கொள்கை மற்றும் தமக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும்
போக்கு அரசியலுக்கு மாற்றாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (முன்னாள்)
சபாநாயகர் பதவி விலகிய பின்னர், பிரதமர் நாடாளுமன்றத்தில் தனது
கட்சியில் சான்றிதழ் இல்லாதவர்களும், பல தகுதிகள் கொண்டவர்களும்
இருப்பதாக கூறினார். அத்துடன், அவர்களின் கட்சி அனைத்து வகையான
அறிவுக்கும் மதிப்பளிக்கிறது என்றும், அறிவை குறுகிய பொருளில் மட்டும்
புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.

நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். கல்வி அமைச்சரிடமிருந்து
நான் எதிர்பார்க்கும் பார்வை இதுவே. ஆனால் அதே நேரத்தில் மறுக்க
முடியாத ஒரு உண்மை என்னவென்றால், தேசிய மக்கள் சக்தி தாங்கள்
பிரச்சாரத்தில் நீண்ட நாட்கள் தொடர்ந்த அளவிலும், கல்வித் தகுதிகளை
வலியுறுத்தும் ஒரு விளையாட்டைத் திட்டமிட்டே விளையாடினர். பொதுவாக
பல்கலைக்கழக பகிடிவதை, போராட்டங்கள், தொழிலாளர்
வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் மக்கள் விடுதலை
முன்னணியின் (JVP) படிமம், இப்போது தேசிய மக்கள் சக்தி மூலம்
திறமையுள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், அறிவியல் மேதைகள் மற்றும்
கலைஞர்களைக் கொண்ட ஒரு சிறந்த உறுப்பினர்களின் அமைப்பாக
மாற்றப்பட்டுள்ளது.

‘தகுதி விளையாட்டு’ தேர்தல் நாணயமாக மிகவும் திறம்பட வேலை
செய்ததற்கான காரணமே, இலங்கையர்கள் கல்வித் தகுதிகளை மிக
அதிகமாகவும், சில நேரங்களில் பிரச்சனையாக்கும் வகையிலும்
மதிக்கிறார்கள் என்பதுதான். இது, ஊழல் மற்றும் கபடம் நிறைந்தவர்களுக்கு
எதிராக நிற்கும் ஒரு கட்சியாக தேசிய‌ மக்கள் சக்தியை உலகுக்கு காட்டும்
முயற்சிக்கு நம்பகத்தன்மையையும், நெறிமுறையையும் அளித்தது.

இப்போது, இந்த பிரச்சனையின் முதல் பகுதிக்கு வருவோம் — நமக்கு
இருக்கும் கல்வித் தகைமைகள் மீதான அன்பு. கல்வித் துறைகளில்,
‘பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்’ என்ற வரியை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
பயன்படுத்தப்படும் ஒரு கையெழுத்து வரியாக மாறிவிட்டது. மேலும், ஒரு
பாடநெறிக்காக பதிவு செய்தவர்கள் வகுப்புகளுக்கே வராமல், சான்றிதழ்
வழங்கும் விழாவுக்கு மட்டும் வருவதே ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது.
சில துறைகளில், தேவையில்லாத இடங்களிலும் பணியிடங்களுக்கு
பட்டங்கள் கட்டாயமாக்கப்படுவது மேலும் கவலைக்குரிய ஒன்று.

இந்த தகுதிக்கான காதல் என்பது புதிய ஒன்றல்ல. 2005ஆம் ஆண்டு
வெளியான ‘இலங்கையில் வெளிநாட்டு தகுதிகள் வழங்குநர்களின் வளர்ச்சி’
என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆஞ்சலா W.
லிட்டில் மற்றும் ஜெயின் எவன்ஸ் ஆகியோர், இலங்கையில் உருவான
‘தகுதி சந்தையின்’ வளர்ச்சியை விவரிக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட
ஆய்வில், மூன்று தேசிய பத்திரிகைகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
வெளியான தகுதி வழங்கும் விளம்பரங்கள் 1965இல் 15 ஆக இருந்தன,
ஆனால் 2000ஆம் ஆண்டில் அது 153 ஆக உயர்ந்திருந்தது. 2000-க்குப் பிந்தைய
ஆய்வுகள் எதைக் காண்பிக்குமோ என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

அந்தக் கட்டுரையாசிரியர்கள், 1980-க்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற
பொருளாதார தாராளமயமாக்கமும் வளர்ச்சியும் தொடர்பாக, தகுதி வழங்கும்
தொழில்துறை வளர்ந்த முறையை ஒப்புமையாக வரைபடம் போல்
காட்டுகின்றனர். அவர்கள் நேரடியாக இந்த இணைப்பை
மேற்கொள்ளவில்லை என்றாலும், நமது பார்வையில் இந்த வளர்ச்சியை,
வளர்ந்து கொண்டிருந்த மக்கள் தொகைக்கும் வேகமாக மாறிக்கொண்டிருந்த
பொருளாதாரத்துக்கும் ஏற்றவாறு உயர் மற்றும் தொழில்துறைக் கல்வியை
விரிவுபடுத்தத் தவறியதுடனும் இணைக்க முடிகிறது — அது கூடவே
இருபதாண்டுகால அரசியல் குழப்பங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில், கல்விக்கான அரசுப் பொதுவிதிவிதிகள் மற்றும்
நிதியளிப்புகள் தொடர்ந்து குறைந்தன. 2000-க்குப் பிந்திய காலத்தில்,
உலகளாவிய நிதியியல் நிறுவனங்களிடமிருந்து பாரியளவான‌ கடன்கள்
பெற்றிருந்த போதிலும், கல்விக்கான நிதி மேலும் கடுமையாக குறைக்கப்பட்டது. இதுவே, ஒரு பக்கத்தில் அரசாங்கப் பாடசாலைகளின்
தரமின்றிய நிலையிலான‌ வீழ்ச்சியையும், மற்றொரு பக்கத்தில்
தனியார்மட்டத்தில் நடைபெறும் கல்வியின் எழுச்சியையும் விளக்குகிறது —
இது, ‘கல்வி’க்காக அல்ல, ‘தகுதி’க்காக’ கற்றல் என்ற எண்ணத்தின் மூலம்
குறிப்படப்படுகிறது.

தகைமை எதிர் கல்வி

தகுதிச் சான்றிதழைக் காட்டிலும் கல்வியையும் அறிவையும் மேலாக
மதிக்கும் ஒரு சமூகத்தை மீண்டும் உருவாக்குவது ஒரு நீண்ட மற்றும்
சிரமமான பயணமாகும். இதற்கான தீர்வு எளிதாகக் கேட்கப்பட்டாலும், அதை
ஆரம்பிப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் கடினம். இது, பல வருடங்கள்
நீடிக்கும், தரமான‌ மற்றும் அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடிய கல்வி
முறை ஒன்றையும், ஒரு ஒழுக்கமிக்க சமூகமயமாக்கலையும் நோக்கிய
நகர்வாக இருக்க வேண்டும். உண்மையில், ஒழுக்கமும் நெறிமுறையும்
சமூகத்தில் பரவ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது, குறிப்பாக அது நிதி
தட்டுப்பாடுடன் செயல்படுகின்ற, ஏற்கனவே சேதமடைந்த கல்வி அமைப்பின்
அடிப்படையில் நடக்கவேண்டியதாயிருக்கும் நிலையில் எதிர்பார்ப்பது
அர்த்தமற்றதே. மேலும், அந்தக் கல்வி அமைப்பு ஒரு சீரழிந்து வரும்
சமூகத்தில் ஊன்றியிருக்கின்றது என்றால், எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருக்க
முடியாது.

கல்வித்துறைக்கு உண்மையான, பௌதீக அளவில் உட்கட்டமைப்பை பூர்த்தி
செய்யும் ஆதாரங்கள் மிகவும் தேவை. இன்றைய இலங்கையில், சில
பாடசாலைகள் கணினி ஆய்வுக்கூடங்களை அமைப்பதை
எண்ணிக்கொண்டிருக்கும் போது, பல பாடசாலைகள் பாடசாலை உணவுகள்,
மின்சாரம், நீர் வசதி, சீருடைகள், நாற்காலிகள், மேசைகள் மற்றும்
பாடநூல்கள் ஆகிய மிகவும் அடிப்படையான வசதிகளை கூட இழந்துள்ளன.
மேலும், நாங்கள் அதிக எண்ணிக்கையிலும், நன்கு ஊதியம் பெறும் ஆசிரியப்
பணியாளர்களையும் எமது பாடசாலைளில் இணைக்க வேண்டிய
தேவைப்பாட்டில் இருக்கின்றோம். அரசாங்கம், தனியார் அல்லது சர்வதேச கல்வி துறைகள் என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களுக்கான தேசிய
அளவிலான ஒழுங்குமுறை விதிகள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள்
ஆகியன‌ கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அதிகம் பேசப்படாத, மிகப் பெரிய ஒரு பிரச்சனை என்னவென்றால், நமது
கல்வி அமைப்பைப் பற்றி நாங்கள் உண்மையில் போதுமான அறிவு
பெற்றிருப்பதில்லை என்பதாகும். நமது கவனம் நீண்டகாலமாக தேசிய‌
கல்வி அமைப்பின் மீது மட்டுமே மையமாக இருந்த காரணத்தால், பிற
துறைகள்— உதாரணமாக, ஆரம்பக் கல்வி, தனியார் மற்றும் சர்வதேச கல்வி
துறைகள் பற்றிய நமது கவனம் குறைந்து விட்டது. இந்த நாட்டின் கல்வி
சூழலை (ecosystem) உடனடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய மிகுந்த அவசியம்
உள்ளது. இச்செயற்பாட்டுக்கு பல துறைகறை சேர்ந்த‌ ஆராய்ச்சியாளர்கள்
பங்களிக்க முடியும். கல்வித்துறைக்கு பல நன்கொடைகள் மற்றும் கடன்கள்
அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறதாயினும், இத்தொகைகள்
பொருத்தமான நோக்கில் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் ஒருமுகத் தெளிவு
எம்மிடம் இல்லை.

சுருக்கமாக கூறவேண்டுமானால், அடிப்படைகளை சரி செய்வது மிக
அவசியம். அதே சமயம், கல்வித் தகைமையின் மதிப்பை மிக அதிகமாக
மதிப்பீடு செய்வதை மறுபார்வையிட, ஒரு முழுமையான மாற்றான கல்வி
அமைப்பை முன்வைக்கும் எண்ணத்தையே நாங்கள் அதிகம்
வலியுறுத்தவேண்டும்.

பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள் மீதான மீள்பரிசீலனை

நாங்கள் கல்வியை விட தகைமைகளை அதிகமாக மதிப்பது நீண்ட காலமாக
தெளிவாக இருந்து வருகிறது. போலி சான்றிதழ்கள் மற்றும் கௌரவ
பட்டங்கள் பரவலாக இருப்பது மட்டும் அதன் ஒரே குறியீடு அல்ல. ChatGப்ட்
வருவதற்கு முன்பே, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் ghostwriting
(உதவி எழுதுதல்) சேவைகள் விளம்பரம் செய்யப்பட்டு வந்தன; அதாவது
பணம் கொடுத்து பயிற்சிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும்
செயற்பாடு. இது உறுதியான ஒழுங்கொன்றுக்கு விரோதமான தொழிலாகும். மேலும் சட்ட விரோதமாயிருக்க வேண்டிய‌, ஆனால் இப்போது மிகவும்
பொதுவான, வழங்குநர்களும், வாங்குவோரும் இருக்கும் விடயமாக‌ இதை
சாதாரணமாகவே கருதுகிறார்கள்.

நாங்கள் தரத்தை விட அளவுக்கே அதிக மதிப்பீடு கொடுத்து வைத்துள்ளோம்:
ஒரே நேரத்தில் இரு பட்டங்கள், அதிகமான தகுதிகள், எண்ணிக்கை
அடிப்படையிலான பதவி உயர்வுகள் மற்றும் தரவரிசைகள் போன்றவை மீதே
எமது மதிப்பீடுகள் அதிகமாக இருக்கின்றன‌.

எங்கிருந்து ஆரம்பிப்பது?

இலங்கையில் கல்வி வழியாக ஒழுக்க விழுமிய‌க் கற்பித்தல்
நடைபெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது எளிதான அல்லது
விரைவான தீர்வின்றி இருப்பின் ஒரு பெரிய பிரச்சனையாக மாறும்.
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாட்டின் இடைக்கால பாதீடு குறித்து
விவாதிக்க வேண்டிய பாராளுமன்றம், அங்கு உறுப்பினர்கள் ஒருவரது கல்வி
தகுதிகள் பற்றி ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை பரிமாறிக்
கொண்டிருக்கும்போதும்; ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தன் கல்வித்
தகுதியை நிரூபிக்க முடியாமல் ஒரு வாரம் கழித்து கூட சான்றுகள்
காட்டாமல், பிறகு தனது பதவியிலிருந்து விலகுவது போதும் எனக் கருதி,
பாராளுமன்ற ஆசனத்தில் இருந்து விலகாத போதும்; ஊழல் தொடர்பான
உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பிய கட்சி பல நாட்கள்
எடுத்துக் கொண்டு பதவியிலிருந்து விலகும் போதும்; உண்மை மற்றும்
நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவை
பேச்சாளர் கோபப்படும் போதும் – நாம் இன்னும் மக்களைக் கூட்டான
நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகள் நோக்கி மீண்டும் சமூகமய‌ப்படுத்த ஒரு
நீண்ட பாதையை சென்றடைய வேண்டியுள்ளது என்பது புலனாகின்றது.
ஊழலைத் தடுக்கவும், வீணான செலவுகளை குறைக்கவும் மட்டும்
செயற்பட்டால் போதாது. கற்றலும் ஒழுக்கமும் இணைந்து நடக்கின்ற
அர்த்த‌மிக்க மற்றும் பரவலான பொதுக் கல்வியை வழங்க ஆரம்பிக்க
வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.