‘எனது எதிர்பார்ப்பு தேவையானது, ஆனால் அது மட்டும் போதாது’
பெண்ணியத்தை பல்கலைக்கழகத்தில் கற்றலும் கற்பித்தலும்

அருனி சமரகோன்

நவீன பல்கலைக்கழக கல்வியானது பிரித்தானியரால் 1921ஆம் ஆண்டு
சிலோன் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டது,
இதுவே பின்னர் பொது பல்கலைக்கழக அமைப்பாக விருத்தியடைந்ததோடு
கல்வியியலாளார்களும் ஆய்வாளர்களும் உலகளாவிய கல்வியை பெறும்
இடமாக மாறியது. 1947இலேயே முதலாவது பல்கலைக்கழகமான சிலோன்
பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பின்னர், 1972ஆம் ஆண்டின் 1ஆம்
இலக்க சிலோன் பல்கலைக்கழக சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு
காலனித்துவ, ஆணாதிக்க பெறுமானங்கள் பல்கலைக்கழக
பாடத்திட்டங்களில் வேரூன்றியதோடு நிர்வாக சட்டகத்திலும் ஊடுருவின.
பல்கலைக்கழக கலாசாரமும் ஆங்கிலம் பேசும் உயர்குடி வெள்ளை
ஆண்களால் வடிவமைக்கப்பட்டதோடு அதுவே பின்னர் செயற்திறத்தோடு
கட‌த்தப்பட்டு, மத்தியதர மற்றும் நாட்டுப்புற பிரபுக்களிலிர்ந்து வந்த‌ “சுதேச”
அறிவுஜீவிகளால் உருமாற்றப்பட்டது.

இன்றும், சிங்கள மற்றும் தமிழ் பின்புலத்தையுடைய வெளிநாடுகளில்
பட்டப்பின்படிப்பை பூர்த்தி செய்த இந்த “சுதேச” அறிவுஜீவிகளே நாட்டின்
பல்கலைக்கழகங்களின் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான போக்கை
தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள். பிரித்தானியரிடமிருந்து
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் எமது
பல்கலைக்கழகங்களில் மானுட மற்றும் சமூகவியல் கற்கைகளின்
பாடத்திட்டங்களை விடுத்து ஏனைய எதிலுமே பெண்ணிய சிந்தனை
காணப்படவே இல்லை.

பெண்ணியத்தை கற்கவும் கற்பிக்கவுமான முயற்சியில், குறைந்தபட்சம்
அதற்கான ஆதரவில் கூட இலங்கை பல்கலைக்கழகங்கள் எவ்வளவு தூரம்
முயற்சி எடுத்திருக்கின்றன? இந்த ஆக்கம் இலங்கை பல்கலைக்கழகங்களில் பெண்ணியத்தை கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள சவால்களை குறித்து
பேசுகின்றது. இந்த ஆக்கம் பெண்ணிய சிந்தனை தொடர்பான சுருக்கமான
முன்னுரையோடு ஆரம்பிக்கப்படுவதோடு 2019ஆம் ஆண்டு மூன்று
பல்கலைக்கழகங்களில் இரு தலைப்புகளுக்கு கீழ் மேற்கொள்ளப்பட்ட
இனவரைவியல் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட அனுபவத்தரவுகளையும்
ஆராய்கின்றது. அவ்விரண்டு தலைப்புகளாவன: பெண்ணியத்தை “புதிய
அறிவாக” முன்னிறுத்துவதிலுள்ள சவால்கள் மற்றும் பெண்ணிய
அறிஞர்களின் “குரலை” செவிமடுத்தல் ஆகியவையாகும்.

பெண்ணியம் என்பது யாது?

“பெமினிஸ்ம்” (பெண்ணியம்) என்பது பிரெஞ்சு மொழிச்சொல்லாகும், இதன்
விளக்கம், பெண்களை அவர்களின் பாலினப்பண்பை வைத்து அடக்கி
ஒடுக்குதலாகும்; ஆணாதிக்க அரசியலின் வழி பெண்களை அடக்கி
ஒடுக்குதலாகும். பெண்ணிய சிந்தனைப்பள்ளிகள் சீர்திருத்தங்களை
முன்வைக்கும்தாராண்மைவாதம் மற்றும் ஆணாதிக்க கட்டமைப்பை
மாற்றுவதற்கான புரட்சிகர சீர்திருத்தங்களை முன்வைக்கும் சோஷலிசம்
ஆகிய கருத்தியல்களோடு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக
செயலெல்லைகளில் பெண்களை அடக்கி ஒடுக்குவதை
இல்லாமல்லாக்குவதற்காக தம்மை அணிசேர்த்துக் கொள்கின்றன.

முதலாம் அலை பெண்ணியமானது, அரசியல் செயலெல்லைகளில்
பெண்களை உள்ளீர்ப்பதில் குறியாக செயற்பட்டதோடு வாக்களிக்கும் உரிமை
மற்றும் ஆளும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை
குவியமாக கொண்டியங்கியது. இருப்பினும், பாலின உள்ளீர்ப்பு எனும்
தாராண்மைவாத பெண்ணிய கருத்தாக்கத்தில் தொழிலாளர் வர்க்க பெண்கள்,
வெள்ளையினமல்லாத பெண்கள் மற்றும் புலம்பெயர் பெண்கள் ஆகியோரின்
அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த தவறியதாக
விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்த விமர்சனத்துக்கான ஆதாரமாக, எம்மலைன் பெங்கர்ஸ்ட்டின் வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கான
“வார்த்தைகள் வேண்டாம், உறுதிப்பாடுகளே தேவை” (1858-1928) என்ற
இயக்கத்தில் ஐக்கிய ராச்சியத்திலிருந்த தொழிலாளர் வர்க்க பெண்கள்,
வெள்ளையினமல்லாத பெண்கள் மற்றும் புலம்பெயர் பெண்களின் குரல்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதை குறிப்பிடலாம்.

தாரண்மைவாத பெண்ணியம் மீதான இவ்வாறான விமர்சனங்கள்
சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டு விருத்தி செய்யப்பட்ட இரண்டாம்
அலை பெண்ணியத்தை நோக்கி செலுத்தின. இரண்டாம் அலை
பெண்ணியவாதிகள், ஆணாதிக்க அமைப்புக்கெதிராக புரட்சிகர மாற்றங்களை
முன்மொழிந்ததோடு பெண்களை பாலியல் பண்டங்களாக
நோக்குவதற்கெதிரான போராட்டத்தையும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான
சம ஊதியத்தையும் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும் போராடினர்.
மூன்றாம் அலை பெண்ணியம் இரண்டாம் அலை பெண்ணியத்தின்
தொடர்ச்சியாக உருவானதாக இருப்பினும் அதன் செயற்பாடுகள் பெண்களின்
தனிப்பட்ட கதையாடல்களில் தன்னை நிலைநிறுத்தியதோடு பெண்களை
அடக்கி ஒடுக்கும் இடைவெட்டும் காரணிகள் குறித்து பேசியது. இது அன்றாட
அரசியலை முன்நிறுத்தியது. இது பெண்ணியத்தின் அடிப்படை வாசிப்புகளில்
ஒன்றாக மாறியுள்ளதோடு உலகளாவிய தெற்கில் இருந்து முன்நிறுத்தப்படும்
அண்மைய பெண்ணிய இலக்கியங்கள், பெண்களின் குரல்களை
பிரதிந்தித்துவப்படுத்த‌ல் போன்ற ஏனைய செயலெல்லைகளிலிருந்து
பேசுகின்றன.

“புதிய அறிவு” மற்றும் “புதிய நடைமுறைகளாக” பெண்ணியம்

பெண்ணியம் அடக்குமுறை; படிவார்ப்புகுட்படுத்தல்; அதிகாரப் படிநிலைகளை
இல்லாதொழிக்கவும் புதிய அறிவையும் நடைமுறைகளையும் வளார்க்கவுமே
நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. இருப்பினும், இலங்கையின்
பல்கலைக்கழக புத்திஜீவிகள் “அதிகாரப் படிநிலைகளையும்
படிவார்ப்புகளையும்” வீழ்கட்டமைப்பு செய்வதில் பெண்ணிய சிந்தனையை
கொண்டுவருவதில்லை. உதாரணமாக, ஒரு மூத்த அறிவுஜீவி, பெண்ணியத்தை “ஆண்களுக்கெதிரான சக்தி” என்பதாகவும்
“ஆண்களுக்கெதிரான கருத்தாடலாகவும்” படிவார்ப்பு செய்கின்றார். மானுட
மற்றும் சமூகவியல் பீடத்திலுள்ள துறையொன்று இளங்கலை
பாடத்திட்டத்தில் பாலின ஆய்வு கற்கைகளை “சந்தை மதிப்பு” இல்லையெனக்
கூறி நீக்கியிருக்கின்றது. இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள்
நவதாராளாவாத கொள்கைகளின் விளைவாக STEM கல்விக்கு அதிக
“முக்கியத்துவம்” வழங்கி சந்தை மதிப்புள்ள இளங்கலை கற்கைகளுக்கே
அதிக இடத்தை வழங்குகின்றன.

இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றல் மற்றும் கற்பித்தல்களில்
பெண்ணிய இலக்கியங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? இந்த அறிவை
அணுகுவதற்கு யாருக்கு இயலுமாயிருக்கின்றது? அனுபவத்தரவுகளின் படி,
பல்கலைக்கழகங்களில் பெண்ணிய இலக்கியங்கள் மற்றும் கருத்தியல்கள்
ஆங்கிலம் பேசும் “குறிப்பிட்ட ஒரு சாராருக்கிடயிலேயே”
வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பெண்ணிய கருத்தாடல்களும் இதே
“குறிப்பிட்ட ஒரு சாராருக்கிடயிலேயே” நடத்தப்படுகின்றன. எனது ஆய்வின்
மாதிரியொன்றான இளங்கலை பட்டதாரி மாணவர் ஒருவர்
“பல்கலைக்கழகத்தின் பீட அறையில் நடைபெறும் தேநீர் விருந்துகளிலேயே
பெண்ணிய கருத்தாடல்கள் ஏற்படுவதாக” கூறினார். இதன் மூலம்,
பெண்ணிய கருத்தாடல்கள் காலனித்துவ மொழியான ஆங்கிலத்தை பேசும்
அதிகமாக மத்திய தர வர்க்க மக்களுக்கிடையே தான் பெண்ணிய
கலந்துரையாடல்கள் நடைபெறுவது புலனாகின்றது. இதிலிருக்கும் வர்க்க
காரணியானது, பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரி மாணவர்கள்
பெண்ணிய கலந்துரையாடலகளில் ஈடுபதில் தாக்கம் செலுத்துகின்றது.

வகுப்பறைக்கு வெளியிலே பெண்ணியம் பற்றி கலந்துரையாடுவதற்கான
தளங்கள் மாணவர்களுக்கு காணப்படுகின்றதா? நாட்டின் ஒவ்வொரு
பல்கலைக்கழகங்களிலும் “பாலின் சமத்துவம் மற்றும் நியாயத்துக்கான
மன்றமொன்றை” கொண்டிருக்க வேண்டுமென்று பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்வாறான
மன்றங்கள் பெண்ணியம் குறித்தான கலந்துரையாடல்களுக்கான தளங்களாக தொழிற்படக்கூடியவையாக இருக்க முடியுமென்றாலும் தற்போது
இம்மன்றங்கள் மூலை முடுக்குகளில் இளங்கலை பட்டதாரி
மாணவர்களுக்கிடையே சிறிய இடையீடுகளுடனேயே நடைபெறுகின்றன.
“நான் ஒருபோதும் பாலின் சமத்துவம் மற்றும் நியாயத்துக்கான
மன்றமொன்றை பல்கலைக்கழகத்தில் கண்டதில்லை. இந்த மன்றம் எதற்காக
நிறுவப்பட்டது மற்றும் யாரால் நடத்தப்படுகின்றது?” என்பதே நாட்டின்
தலைநகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு இளங்கலை பட்டதாரி
மாணவரின் பதிலாக இருந்தது. நான் ஆய்வு மாதிரிகளாக எடுத்த இளங்கலை
பட்டதாரி மாணவர்கள் இவ்வாறான மன்றங்களின் இருப்பையே
அறியாதவர்களாகவும் அவற்றை நடத்துபவர்களை அடைவதற்கான
வழிவகைகள் குறித்த சிக்கல்களோடுமே இருந்தனர். என்னுடைய கருத்துப்படி
இவ்வாறான மன்றங்கள் மாணவர்களுக்கு பெண்ணியம் தொடர்பான புரிதலை
வழங்கும் தளங்களாக இருக்க முடியும்னெபதோடு அவர்களாஇ
அரசியல்ரீதியில் தெளிவூட்டி பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை
தடுக்கவும் பெண்ணுரிமை தொடர்பான புதிய அறிவை விருத்தி
செய்யவுமான தளங்களாக இயங்கலாம்.

பெண்ணிய அறிவுஜீவிகளின் குரல்களை செவிமடுத்தல்

பெண்களை ஒடுக்குதல்; அடக்குமுறைக்கு உட்படுத்தல்; படிவார்ப்பு செய்தல்;
பாலியல் “பண்டங்களாக” மாற்றுவதற்கெதிராக போராடிய எமது
பல்கலைக்கழகங்களின் பெண்ணிய அறிவுஜீவிகளின் வரலாற்று
பங்களிப்புகளை நான் எப்போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. இவர்கள்
பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்ட வேண்டிய சமத்துவம் மற்றும்
சுதந்திரம் தொடர்பான புதிய கலாசாரங்களுக்காக தம் குரல்களை
உயர்த்தினர். பேராதனை பல்கலைக்கழக மூத்த பெண் பேராசிரியர் ஒருவர்
தான் இருக்கும் அரசியல் விஞ்ஞான துறையில் தான் ஏனைய ஆண்
இணைநிலையினரால் ஒடுக்க்ப்பட்ட கதையை கூறியது இன்னும் என்
நினைவில் உள்ளது. இத்தகைய பெண் அறிவுஜீவிகள் ஆண்டாண்டு காலமாய்
இருந்து வந்த ஆணாதிக்க அமைப்புகளுக்கெதிரான தமது போராட்டங்களை
முடுக்கி விட்டவர்களாவர்.

பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாக பீடங்களின் கூட்டாளிகளாக இருந்த
இணைநிலையினரால் சில மூத்த பெண் பேராசிரியர்கள் பாலியல் மற்றும்
சொல்ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டிருப்பதும் நடந்திருக்கின்றது.
இந்த அறிவுஜீவிகள் இன்னமும் தமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக
காத்துக்கொண்டிருப்பதோடல்லாமல் இவர்களின் “அவளின் கதைகள்”
இலங்கை பல்கலைக்கழக வரலாறுகளிலும் பதியப்படுவதுமில்லை. ஏன் இந்த
கதைகள் மறக்கடிக்கப்பட்டன?

நான் எனது இனவரைவியல் ஆய்வுக்காக சந்தித்த இவ்வாறான பெண்
புத்திஜீவிகள், பெண்கள் “தொழில்முறைத்திறம்” என்ற பேரில் ஏன் தொழில்
இடங்களுக்கு ஆறு முழ சாரிகளை அணிந்து வரவேண்டியிருக்கின்றதென்ற
கேள்வியை என்னிடம் முன்வைத்தனர். தென்னிலங்கையின்
பல்கலைக்கழகமொன்றில் இளங்கலை பட்டதாரி மாணாவ்ர்களுக்கு விரிவுரை
மேற்கொள்ள வந்த மூத்த பெண் விரிவுரையாளாரொருவர் டீ ஷேர்ட்டும்
டெனிம் காலணிகளும் அணிந்திருந்தமை பல்கலைக்கழகத்தில் பாரிய
கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட உடையை திணிப்பது
அதிகாரத்தின் கூறாக காணப்படுவதோடு, அது பெண்களின் விடயத்தில்
ஆணாதிக்கத்தின் கூறாக வெளிப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் “பேச்சு சுதந்திரத்தின்” தேவையை முன்னிறுத்தியும்
தொழில்நிலை, வயது, இனத்துவம், சாதி, வர்க்கம் மற்றும் பால்மை ஆகிய
படிநிலைகளால் பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படுவது குறித்தும் குரல்கள்
எழுப்பப்பட வேண்டும். இவ்வாறான படிநிலைகள் புதிதாக இணைந்துள்ள
பல்கலைக்கழக ஆசிரியர்களின் விமர்சன சிந்தனை மீது எதிர்மறையான
தாக்கங்களை புரிகின்றதெனவும் நான் விவாதிக்கின்றேன். இவ்வாறானவர்கள்
தொழில்நிலைகளில் தமக்கு மேலே இருப்பவர்களின் திருப்தியைத்தான்
கவனத்தில் கொள்கின்றார்களே ஒழிய பல்கலைக்கழக கொள்கைகள் மீதான
விமர்சனப் பார்வை இருப்பதாக தெரியவில்லை. இதனால் இவர்கள்
நாளடைவில் இப்படிநிலைகளை சுமக்கும் காவிகளாக மாறுவது
துரதிஷ்டவசமானது.

முடிவில், போலோ ப்ரியர் எதிர்பார்ப்பு எனும் போதனையில் (1999)
குறிப்பிடுவது போல ‘எனது எதிர்பார்ப்பு தேவையானது, ஆனால் அது மட்டும்
போதாது’ என நானும் கூறுகின்றேன். குப்பி தளத்தை நான் பெண்ணிய
அறிவுஜீவிகளின் குரல் ஒலிக்கும் மற்றும் செவிமடுக்கும் தளங்களில்
ஒன்றாக பார்க்கின்றேன். இது தொடர்பான மேலதிக விடயங்களை நான்
எனது அடுத்த குப்பி ஆக்கத்தில் கலந்துரையாடுவேன்.